காய்க்கும் உறவுகள்
வேவுப் புலிகள் தம் பணி முடிக்கும்
தருணத்தில் ஒளிர்ந்து மிளிர்ந்தனர்.
எதிரி முகாமின் ஏற்றத் தாழ்வுகள்,
ஒலியலை வழங்கும் தொடர்புக் கோபுரம்,
அழிவை பெருக்கும் ஆயுதக் களஞ்சியம்,
படையினர் உறையும் பதிந்த பகுதிகள்,
செல்களை ஏவும் பல்குழல் சுழல்கள்,
குண்டுகள் விதைத்த மண்டலிப் பரப்பு,
மின்சாரம் பாயும் கம்பி வேலிகள்,
அசைவை உணர்த்தும் இரவுச் சூரியர்கள்,
இடிந்து நொறுங்கிய நேற்றைய வீடுகள்,
கற்கள் முட்கள் அடர்ந்த காணிகள்,
நச்சுப் பூச்சிகள் நிறைந்த புதர்கள்,
கட்டுகள் இழந்த சாவுக் கிணறுகள்
என்று பற்பல......
முன்றல் பரப்பில் எதிரி முகாமின்
மாதிரி ஒன்று வடிவம் கொண்டது.
இனியவன் வரவில் கனிந்த உறவுகள்
இனிவரும் பொழுதினை எண்ணிக் காய்த்தன.
தலைவனின் ஆணைக்காய் காத்திருந்த சேனையின்
விழிகளில் ஒளிரும் இலட்சிய நெருப்பு
வலிகளை எரிக்கக் கனன்றது. - அங்கு
தளபதியர் வரவிற்காய் காத்திருந்தர் களப்புலிகள்.
இனியவன் சிந்தை இடரினில் தவித்தது.
நிலைமையை அறிந்து நிலையின்றித் துடித்தது.
தோழனின் மனதினை அறிந்திட விழைந்தது.
துணிந்தொரு கேள்விக் கணையினைத் தொடுத்தது.
'தெளிந்த சிந்தைக்கு தெரியாத விந்தை என்ன?"
புரியாது சேது விழிகளால் வினவினான்.
'தெருவோரப் பள்ளம்"
தூக்கிப் போட சேது அதிர்ந்தான்.
பாக்கியில்லாது பதைப்புற்று விழித்தான்.
'தெருவோடு நடந்தவையை
அருகிருந்து பார்த்தானா?....... எப்படி?"
'என்னடா என் கேள்விக்கு
பதில் இன்னும் இல்லை?"
இனியவன் குரல் ஓங்கி ஒலித்தது.
சேதுவின் நாவோ செயலற்று உலர்ந்தது.
ஆயிரம் எண்ணங்கள் அகத்திற்குள் அலைந்தன.
'அவளைப் பற்றி அறிந்திருப்பானோ?"
கேள்வி கடலாய் கொந்தளித்து எழுந்தது.
செந்தமிழினியவன் செப்பிய கூற்றினால்
சேதுவின் செயலிலே சாது தடுமாற்றம்.
நட்புக்குள் அகப்பட்டால் தப்புதல் இலகா?
வழியின்றி - பேசும் வகையின்றித் தவித்தான்.
தகுந்த காரணம் தேடித் தளர்ந்தான்.
அவ்வேளை .
தப்ப வைக்க வந்ததுபோல் - யாழ்த்
தளபதி வரவு தெரிய,
செப்புக் குண்டுச் சரத்தினை
எண்ணும் விதத்தினால் தன்னை மறைத்தான்.
நாளைய இரவு!!!
பகைவர் முகாமின் பாடைக்கு நாட்குறித்தானது.
மாதிரி வடிவின் முன்- தளபதி
நீட்டிய தடியுடன் திட்டங்கள் செப்பினார்.
குழுக்கள் குழுக்களாய் உழுக்களைப் பிரித்து,
இலக்கு நோக்கி, எளிதாய் நகர்ந்து
முன்னேறித் தகர்க்கும் நெறியினை உரைத்தார்.
மருத்துவக் குழுவும், ஊர்காவற் படையும்
தயார் நிலையில் இருக்கப் பணித்தார்.
கடல் தவிர்த்து முத்திசை வெளிக்கும்
முப்பெரும் தளபதிகள் ஒன்றிலே சேது
என்றது அவர் கூற்று.
திட்டமிடலில் இரவு கரைந்தது.
வட்டச் சூரியன் கிழக்கு நுதலில்
பொட்டுப் போல் எழுந்தான்.
திடலெனத் திரண்ட வயங்களின் மத்தியில்
இனியவன் ஓடித் திரிந்தான்-அவன்
நலத்தினைக் காட்டி, களத்தினை மறுத்த
தோழரை மனதில் சினந்தான்.
பூமியைச் சுற்றும் சந்திர கலைபோல்
சேதுவை இனியவன் சுற்றினான்.
ஆமை போல அகத்தினை ஒடுக்கி,
சேது இனியவனை (ஏ)மாற்றினான்.
அழுத்தமுள்ள அகமது அணையுமா?
உயிர்த்து உயிர்த்து உன்னை (ஏ)மாற்றும்.
இழுத்துப் பூட்டிய இதயம் திறக்கும்
அப்போது பார்க்கிறேன் நண்பா!
வாய்க்குள் வளர்ந்ததை -மனப்
பாய்க்குள் சுருட்டினான்.
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment