Sunday, October 25, 2009

அங்கம் 15

மறவன் உயிர்ப்பூ

குழலிக்கு ஒரு கணம் குவலயம் சுழன்றது.
திகைப்பு எல்லை கடந்தெங்கோ சென்றது.
தோழியின் துணிவு துவட்டிப் போட்டது.

'உறவில்லா உறவுக்கு உறவுமுறை உண்டா?"
உச்சந்தலையில் கேள்வி நச்சென்று குட்டியது.

துயர் சுமந்த தோழி நிலையுணரும் நிலை இல்லை.
உள்ளதினை உள்ளபடி உணர்ந்திருந்தாள் பூங்குழலி.
இருந்தும்.. 'வா" என்று அழைத்தவளுக்கு
மறுக்கும் வைரநெஞ்சம் இருக்கவில்லை.

சாக்குப் போக்குச் சொல்லி
சகி மனதைத் தேற்றிடலாம் என்ற இவள்
நோக்குப் பலிக்கவில்லை

ஊர் இணைந்த காவற்படை ஊரைக் காக்கும் படை
வீட்டுக் கொருவர் இணைந்த புலிகளின் துணைப்படை

சக்கை அடைப்பதிலிருந்து சண்டைகட்கு உரித்தான
சில்லறைத் தேவைகளை தம்தரப்பால் வழங்கும்
தற்காப்புப் படை இவர்கள்
இவர்களை மீறி எவ்விடயமும் இல்லை
இவர்கள் போராளிகள் எனத் தடயமும் இல்லை.

அத்தகைய ஒருவர்தான் அண்டை வீட்டு அன்பரசு
எத்தகைய விடயமும் அவருள்ள அடக்கம்.
அவரை அண்டி குழலி அறிந்தாள்.
புலிகளின் மருத்துவப்பாசறை இருக்குமிடம் தெரிந்தாள்.
மங்கையர் இருவரும் இளையபுலிவீரன்
நலம் காணப் புறப்பட்டனர்.

ஈருருளி உந்த இடையிடையே தடுமாறி
புலிகள்..... வாகன அணி பார்த்து
மனதிடையே படபடத்து,
அறிவொன்று, செயலொன்றாய்
அந்தரித்து அலமலக்கும் சிநேகியிட்டு...
குழலி சிந்தையிலே நொந்தாள்.

மருத்துவப் பாசறையின் வாசலோரம்
பைங்கிளிகள் வந்த பின்னும்
பேச ஒரு வார்த்தையில்லை

வாசலிலே நின்ற உழு
வினாக்கள் கொண்டு விழி நிறைத்தான்.

விடை அறிந்த பிற்பாடு வீரர்களைப் பார்க்க
அனுமதிகள் கிடையாதென
விதந்து உரைத்த விதத்தில் உயர்ந்தான்.

கட்டளைகள் விஞ்சியதால் கெஞ்சுவதில் பயனில்லை
செய்வதேதும் அறியாது குழலியவள் தயங்க
குமுதவிழிக் குளம் நிரம்ப, உதடு அழுத்தி
வரும் விம்மல் அடக்கி வனக்கிளி நிலைத்தாள்.
-----------------------------------

பாசறைக்குள் ஆட்சி செய்யும் பண்ணையார் போல் ஒருவன்
காயமுற்ற வேங்கையரின் கவலைகளைப் போக்கினான்.
பேசிப் பேசி அவரிடத்தே புன்னகைப் பூ எடுக்க
பெரும்பாடு பட்டான்.

ஓர்மமது நிறைந்ததனால்
வேதனை ஓலங்கள் கேட்கவில்லை.
வாதை மிகுந்திடினும்
வன்மையுற்ற மனங்களுக்கு வலிகள் தெரியவில்லை.

வெற்றிச் சேதியது எட்டித்துப் போனதனால்
தோல்விக் கசையடிகள் தோற்றமிட்டு வலித்தன.

அந்த வலிகளுக்கே.. .
இவன் பேச்சு மருந்திட்டு ஆற்றினான், அமர்த்தினான்.

அந்நேரம், வாசலரன் வேவுபுலி
வெளியே யாருடனோ பேசக் கேட்டவன்
எட்டி ஒரு கால்வைத்து எம்பி மண்மூட்டை மீதேற
மதிலரன் வெளிப்பக்கம் இருமங்கையரைக் கண்டான்.

சந்திக்கச் சந்தர்ப்பம்..
இங்கிப்படி அமையுமென்று சிந்தித்தே பார்க்கவில்லை!

அனுமனைக் கண்ட சீதையென
செல்வி செழித்துத் துளிர்த்தாள்.
குழலி கேட்க விழையுமுன்பே
இனியவன் கதவு திறந்தான்.

வாசலில் நின்ற புலியவன் வியக்க,
வாச முல்லைகள் திகைத்து மலைக்க,
தயக்கமின்றியே தாரகை அழைத்து
தனிவழி காட்டியே நடந்தான்.

உளவலி நிறைய தளபதி சேது
தன்நிலை மயங்கக் கிடந்தான் - அவன்
தலை முதல் கால்வரை சிலகளக் காயங்கள்
கதைகள் சொல்லிக் கசிந்தன.

உறக்கம் பாதி, மயக்கம் பாதி
இடையிடை விழிப்பு இயல்பில் இடறி
மண்டலி ஈர்ப்பில் மறவன் உயிர்ப்பூ!

கண்டதும் நடுங்கி, தோழியில் ஒடுங்கி,- உள்ளம்
கொண்டவன் அருகே சென்றது தாமதம்
உதட்டு விளிம்பில் விம்மல் வெடித்தது.

No comments:

Post a Comment