Sunday, October 25, 2009

அங்கம் 11

வேவு புலிகள்

தாளரவம் கூட உச்சமாய் கேட்கும்
ஆளரவம் தெரியாத அமாவாசை அல்!
வான்வெளி எங்கும் விண்மீன்கள் கண் விழிக்க
காரிருள் போர்த்திக் காசினி அயர்ந்தது.

அரச பயங்கரத்தால்
அரைச் சுவராய் ஆகாயம் பார்த்து
உயிர் மூச்சிழந்த உன்னத மனைகள்.
நோக்கும் இடமெல்லாம் கறுப்புப் பேய்களாக
காண்பவரைப் பயமுறுத்தும் சிறுபற்றைக் காடுகள்.




இவற்றுக்குள்,
நாயகர்களாக நச்சரவங்கள்!
இடிந்த சுவற்றுக்குள்ளும், கறையான் புற்றுக்குள்ளும்
குடி கொண்டு ஆங்காங்கே உலவி
அரசாட்சி செய்யும்!

இந்த மன்னவர்கள் ஆட்சியிலே
இரவு நேர மின்மினிகளும்,
நுணல்களும் தகவலின்றிக் கண் மறையும்.

இவைகளைத் தாண்டினால் அப்பொருது களத்தில்
இராட்சதப் பரிதி வட்டங்கள்
குறுகுறுத்து இருள் அழிக்கும்.

அவ்விடத்தில்
பூமகளின் மேனியெங்கும் வெடிப் பூக்கள் காத்திருக்கும்.
ஆளரவம் அறிந்தால் உயிரைக் காவு கொள்ளப் பூக்கும்

தொடர்ந்தால்.....

காலனின் காதலி போல் மின்காவு கம்பி வேலிகள்.
இன்னும் முன்னேறின் புலி வருமோ? எனக்
கிலி பிடித்த நிலையினில் எலிகளின் காவலரன்!

அக்காவலரன் உள்ளிருக்கும்
கனரகச் சுடுகலன்களும், கைக் குண்டுகளும்,
காயத்தைச் சிதறடிக்கும் மோட்டார் எறிகணைகளும்
காற்றின் சலசலப்பைக் கேட்டாலும் உடன் கனலும்.

வேவு புலிகள் சொல்லச்சொல்ல
வேங்கை மைந்தர் பகிர்ந்து கொண்டர்.

நேரம் வந்தது
வீரர் அணிகள் சீராய் எழுந்தன
தகவல் புலிகளின் பின்னே நகர்ந்தன.

எதிரிக் களத்தைச் சுற்றி வளைத்து
ஏக காலத்தில் சிதைப்பது திட்டம்.

வலிகள் திணிக்கும் காடையர் சுற்றி- பல
வரிவயங்கள் பதுங்கி நகர்ந்தனர்.

ஓரளவு தூரம் நெருங்கி ஆனதும்
நேரம் பார்த்துக் காத்திருந்தனர்.
நள்ளிரவு தாண்டும்வரை நகரக் கூடாது
எள்ளளவேனும் எதிரிக்குத் தெரியக்கூடாது!
சேதுவின் கட்டளை செருக்கள வீரரின்
காதுவழியே கனதியாய் நிலைத்தது.

பற்களில் விசம் வைத்துப் பயமுறுத்தும் நாகங்கள்
நெஞ்சில் நஞ்சணிந்த நாயகர்களைக் கண்டு
நாணிக் கூனி நகர்ந்து ஓடின.

கறுப்புப் பேய்களாய் காட்சி தரு பற்றைகள்
உரம்பெற்ற உழுக்களின் உரசலில்
சிலிர்த்துச் சிலிர்த்துத் தம்சிந்தைகளைத் தொலைத்தன.

முட்களின் ஓட்டத்தில் சில மணிகள் கடந்தன.

நள்ளிரவு சற்று நகர்ந்து கொண்டது.
கால்களால் உந்தி, உந்தி நிலமகள் மீதிலே
உழுக்கள் புழுக்களாய் உடலால் ஊர்ந்தனர்.
பாயத் துடித்திருக்கும் புலிவீரர் பின்னிருந்து
படைத் தளபதி சேது
முன்னேறு உத்திகளை முடுக்கிக் கொண்டிருந்தான்.



முட்களையும், கற்களையும் முகத்தெதிரே மூச்சுவிடும்
விச யந்துக்களையும் தாண்டி...........
ஒளிக்கலங்கள் விழித்திருக்கும ;ஓரத்தை அண்மித்தர்.

'ஒளி வீசிகளை செயலிழக்க வை!"
சேதுவிடம் இருந்து ஆணை பிறந்தது.
செருக்கள வீரர் செயலில் இறங்கினர்.

ஓசையில்லாச் சுடுகலன்கள்
சூரிய விளக்குகள் நோக்கி
கூரிய குண்டுகளை உமிழ்ந்தன.

ஒன்றன் பின் ஒன்றாக, ஈர்பத்து இருள்வலிகள்
இறந்து இருள் வளர்த்தன. தருணம் வாய்த்தது.
தரணி பரவிய மிதிவெடி தாண்டி
எதிரியைக் கதி கலக்குவதே மீதி!....

No comments:

Post a Comment