Sunday, October 25, 2009

அங்கம் 9

அகரத்து பாடம்

நன்றி என்பது நாகரீக மேன்மை
பண்பியல் பகரும் அகரத்துப் பாடம்
உரைப்பவராலும், ஏற்பவராலும்
எடுத்துப் போற்றும் சொல்லின் வடிவம்.

இலட்சியம் மனதில் உதித்தவர் முதலில்
பண்பியல் பாடமே கற்கின்றார்.
அலட்சியமாக அதனைத் தவிர்த்தவர் பின்னர்
அவதியுற்றே அரற்றுகிறார்.

நேற்றைய பொழுதின் இப்பூவையர் சேவையை
இன்றுலவும் இவனுயிர் மெய் உரைக்க,
நன்றி செப்ப நலன்புரி வந்தவன்
நங்கை ஒருத்தியே நங்கூரம் இட்டிருக்க
அடுத்தவள் வரவிற்காய் அங்கேயே காத்திருந்தான்.

குழலூதும் இவன் பேச்சு இனியது என்பதால்
குழலிக்கு மணித்துளிகள் மறந்தது உண்மையே.

வீரமூறும் கதைகள்பல விகடமாகப் பேசியவன்
நாவீச்சு ஒலியிழக்க நலங்கெட்டு நலியலானான்
ஒலிதொலைத்த இவன் நிலைக்கு விடை தேடப் பூங்குழலி
அவன் நோக்கும் புறநோக்கில் தன் விழியை ஓடவிட்டாள்.

கண்களில் விழுந்த காட்சி - அதற்கு
இவ்விருவர் மட்டுமே சாட்சி.
குழலி தோழியை அறிந்தவள் தானே!
இனியவன்தான் சற்று விழித்தான்!!

யுகங்கள் தேவையில்லை இந்த யுவரின் நிலையை அறிய
அவர் அகங்கள் பட்ட பாட்டில்
இருவர் மையல் நிலையும் தெரிய...
புரிந்தவர் புரிந்தனர்.

குறும்புடன் சிரித்த இருவர் எண்ணமும்
தீர்வினை ஒன்றாய் தொட்டன.
காலங்காலமாய் காவியக் கதைகள்
சொன்னவை பொய்யாய் ஆகுமா?

ஆடிவரும் தேரழகு அற்புதப் பேரழகு
நிலம் நோக்கி நடை பயின்ற
முகம் சிவந்த தேவதையை
முழுமையாக நோட்டமிட்டான்.

கார்முகிலும், திரிபிறையும்
காண்பவரைக் கவரும் காந்தக் கயல்களும்,
கூரான புருவங்களும், நேரான நாசியும்,
செழுமைமிகு கன்னங்களும், செவ்வண்ண உதடுகளும்,
சின்னக் கழுத்தழகும், செவ்வாழை நிறத்தழகும்,
ஏற்ற வயதுக்குற்றபடி எழில் கொஞ்சும் யௌவனத்தாள்.

இவளைப் பார்த்தொருகால் கவி படைக்க
கம்பன் இங்கு பிறந்திருந்தால்
காவியங்கள் பன்னூறு காற்றாகப் படைத்திருப்பான்.

'சேது மட்டும் விதிவிலக்கா?"
தனக்குள் சிரித்தான் இனியவன்.

அசைந்து வரும் ஆரணங்கை தன்பால் ஈர்ந்திட
தன்னிருப்பைக் காட்டச் செருமினான், இருமினான்.
ஆண் செருமல் கேட்ட அணங்கு அரண்டு நிமிர்ந்தாள்.
அங்கு பேருவகை கொண்ட போரியல் புலி கண்டாள்.

ஈருருளி நிறுத்தி உள் வந்தவளைக் காட்டி
'செல்வி" என்று அவள் சுயம் சொன்னாள் பிரிய சகி.

ஆரோக்கியம் பற்றி அளவளாவல் தொடர்ந்தது.
சீறி பாய்ந்த செல்துகள்கள்
மெய்யுள்ளே சென்று மேலும் மேலும் சிதறியதால்
நெடுநாள் வைத்தியம் இவனுடல் கேட்டது.
அடிக்கடி வைத்தியம் அவனுக்கு என்பதால்
அவையினை முடித்துத் தேறி வந்ததே இவன் நிலை.

சொற்களைப் புடம்போட்டு அவன் செப்பிடச் செப்பிட
செந்தமிழ் மங்கையர் சிந்தை கலங்க
செவிப்புலன் ஏற்றனர்.

-----------

------------------------------------------------------------------------------

இனியவன் விகட கதைகளின் ஊடே
கனிமயில் செல்வியை அளக்க விழைந்தான்.
ஆழியை வெல்லும் ஆழமுடைய
அப்பெண் மனம் முன்னால் தோற்றான்.
அகத்தில் அழுத்தம் முகத்தில் வெகுளி
உள்ளக்குரல் உரத்து உரைத்தது.

நீண்டநேரம் நினைப்பைத் தாக்க
வீரப்புலிமகன் விடைபெற்றான்.

வனப்புக் கோடி பெற்ற இளமயில் நங்கை
வன்மை கோடி கொண்ட தன்னுயிர்த் தோழன்
இணைத்துப் பார்த்தான் நினைப்பே இனித்தது.

செருக்களப் புலியின் தருக்கடக்கும் கிளியிவள் - என
எண்ணத்தில் பலமான கணக்குப் போட்டான்.
இனிக்கும் நினைவுடன் பாசறை வந்தவன்
சுவர் அரன் சுதாவைச் சுகம் கேட்க மறந்தான்.

செல்லும் இடமெங்கும் சேதுவைத் தேடினான்
இன்னவன் ஆவல் இளந்தோழரை ஈர்த்தது.
'உயிர் காத்த கடவுளைப் பூசிக்கப் போகிறான்
வழி காட்டுங்கள்" என
வாய் முட்டும் சிரிப்பொலியும் கேலியும் பிறந்தன.
தோழரின் கேலியைத் தூக்கிப் புறம் வைத்து- போர்த்
தளபாடம் சோதிக்கும் சேதுவிடம் வந்தான்.
'இனியவா" என்று இழுத்தணைத்தான் சேது.

உலைக்களத்தில் காத்தவன்
எமனோடு போராடி உயிர்ப் பறவை மீட்டவன்
நன்றி சொல்கையில் நாத் தழுதழுக்க
இனியவனின் ஓரவிழிகள் கசிந்தன.

'என்னடா இது? ஏனிந்த ஆர்ப்பாட்டம்?"
என்ற சேதுவை மகிழ்வுடன் பார்த்தான்.
மர்மப் புன்னகை பூத்தான்.
பாசறைப் பந்தங்கள் சுற்றியே சூழ்ந்தனர்.
சுகம் கேட்டனர். அகம் திறந்து தம் அன்பினைக் கொட்டினர்.

'பற்று வைத்தனரா என்னிடம்?"
இனியவன் கண்கள் பனித்தன.
இறுகும் உறவுகள் தணித்தன.

No comments:

Post a Comment