மௌன வலிகள்
விடுமுறை நாட்கள் விரைந்து மறைந்தன.
வீதியில் வெயிலின் கடுமையும் தணிந்தது.
உண்ட களையில் உறங்கி விழிக்கும்
மதியமும் மாலையும் கலந்த மத்திமம்.
பிரிவுப் புயல் மையமிட
மௌனம் வலிகளைச் சுமந்தது.
கண்களின் ஓரத்தில் கனிவை மீறி
கண்ணீர் வரவா? என்றது
தாய்க்கும், சேய்க்கும் இடையினில் பிரிவு
சீனச் சுவராய் எழுந்தது.
மோதிரம் தந்தவன் மேதினி நீத்த பின்
சொந்தம் என்பது அவள் சிந்தைக்கிவனே!
அப்பிள்ளையைத் தவிர எவர் உணர்வார்?
ஊண் ஊட்டினாள்,
உப்பரிகை தேடும் உல்லாசன் அல்லாது
தன் மானத் தேன் ஊட்டி- தமிழ்
மானம் காக்க வளர்த்தாள்.
-------
ஈருந்தி எடுத்து, இயல்பு நிலை சோதித்து
ஈன்றவள் விடைக்காய் இளையவன் நிமிர்ந்தான்.
தாய்மை... .
நெஞ்சுக்குள் தவிப்பு
நஞ்சணிந்த நெஞ்சம்!
காணக் காண கருவறை கலங்கியது.
ஏக்கத்துடன் தாயும்,
நாடு மீட்கும் நோக்கத்துடன் சேயும்!
இனி..
ஈன்றவளைக் காண்பது எப்போது?
தாய் அணைத்து முத்தமிட்டாள்.
தனயன் மெல்ல விடை பெற்றான்.
ஈருருளி மிதியடியை இவன் கால்கள் உந்த
பார் விரித்த பாதை பயணத்திற்கு அழைத்தது.
சீராட்டி வளர்த்தவள் சிறிதாகிச் சிறிதாகி
ஓர் பொட்டாகி ஒழுங்கை முனையில் மறைந்தாள்.
காலுந்தக் காலுந்த காற்றைக் கிழித்து
ஈருருளி அவன் கனத்தை ஏற்றுப் பறந்தது.
அதனையும் விஞ்சி- அந்த
கார்காலத் தென்றல் முகம்
இளையவனை ஈர்த்தது.
கொள்ளை எழில் கொஞ்சும்
கோதை முகம் காண,
எல்லை இல்லாமல் ஏக்கங்கள் நிறைய,
நலன்புரி நிலையருகே
வந்த நிலை புரியவில்லை.
ஆவல் பொங்கி, அகம் ஆள
தேவதையைத் தெரிகிறதா? எனும்
தேடல் விரிந்து, விழி ஆள
தெரு மறந்து போனது.
---------------------------------------------------------
எறிகணைகள் குறிப்பெடுத்து சீரழித்த பாதை
ஆங்காங்கே புண்ணாகிப் புதரானது.
வில்வண்டி பயணிக்கும்,
வீதியோரப் பயணிகளின் ஈருருளி ஏறி இறங்கி
எளிதாகப் பறக்கும் கரணம் அடிக்கும்.
பள்ளமும், மேடும் பழகிய பாதையில்
உழவு இயந்திரங்கள் உறுமி வெடிக்கும்.
அவ்விடருற்ற சாலையில் ஈருருளி தடுமாறி,
இயல்பிழந்து, மேற்கிளம்பிச் சின்னக் கரணமிட,
தன்னை நிலைப்படுத்த, தரணியில் கால் ஊன்ற,
நெஞ்சத்தில் அணியான நஞ்சுக் குப்பியது
கண்டத்தைச் சுற்றி அவன் கவனத்தை ஆண்டது.
சின்னஞ் சிறுபொழுது மின்னலிட்ட சிந்தனை
அன்னவன் அகம் ஒடுக்க அக்கணமே
அவ்விடம் விட்டு அகன்றுவிட நினைத்தான்.
ஈருரளி, இடருற்று சாய்வேற்ற நிலை
திருத்தி, அதை நிறுத்தி,
நெற்றி வேர்வை ஒற்றி நிமிர்ந்தான்
கல்லாகச் சமைந்தான்.
தவிர்த்துவிடத் துணிந்தது,
அகன்று போக நினைத்தது,
இயலாத செயலாக இவன் உறைத்து நின்றான்.
விதி எழுதும் தேவனுக்கு இருகூர் விளையாட்டு!
விடுகதைகள் போட்டாலும் வெளிக்காது அவன் குட்டு!
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment