Sunday, October 25, 2009

அங்கம் 2

இடர் காடு

கவனமாக வாருங்கள்!
குண்டுகளும், எறிகணையும்
உயிர் உரசி உலவும் காவலரன் மத்திக்கே
இக்காவியத்தால் நுழைய வேண்டும்!
உயிர் காப்புப் பயிற்சி உங்களுக்கு அவசியம்.

கல்வியில் சிறந்தோன் - இவன்
கலைகளால் உயர்ந்தோன்
சிந்தை நிறை பண்பினன்.
வெள்ளிச் சிலுவையைத் தாங்கியோன்!
தமிழ் அன்னைக்கு ஒரு பிள்ளை
தன் தாயிற்கு தனிப்பிள்ளை
மண்மீட்புப் பணியிலே பாலமிடும் அணிற்பிள்ளை.

ஈழ மீட்புப் போரிலே வேங்கைகள் தனிரகம்
தாய்மண் விடிவிற்காய் ஆகிடுவர் கற்பூரம்
வீரத்தில் உயர்தரம் வீம்பின்றி
செய்யும் செயல்களில் கம்பீரம்
இவர்களுடன் இணைந்த இவனும் ஒரு ரகம்.

போராடப் பிறந்தவன்
எம்மண்ணில் வேரோடிய எதிரிகளை
வேரறுக்க நிமிர்ந்தவன்.
தலைவன் சிந்தையிலே தன்னை நிறைத்தவன்
சொல்லெடுத்துப் பாடிட ஈடில்லா ஆண்மகன்.

இவனுக்கு அன்னை இட்ட பெயர்
"அன்ரனி"
எம் அண்ணன் இட்ட பெயர்
"சேது"
முன்னை எங்கள் சந்ததியர் முடியாட்சி செய்த நாடு
பின் நாளில் சிங்களத்தின் சூழ்ச்சியினால் இடர்காடு
இஃதே
இன்னவன் இதயமதில் மண்தாயை மீட்கும்
விடியல் நெருப்பேற்ற, - அதில்
இலக்கெடுத்து தனை தொடுக்க,
அதன் வழியே
இன்று இந்த காவலரன்
இவனுடைய நிலை பகரும்.

செந்நீரில் குளிக்கும் அன்னை நிலங்காக்க
விழித்த.... இவன் கண்மணிகள்
ஓய்வெடுத்துக் கனகாலம்.

வெட்ட வெளி வானத்தில் வெய்யவன் கொதித்திருப்பான்.
எட்டும் கைத் தூரத்தில் எதிரிப்படை நின்றிருக்கும்
வெட்டப்பட்ட குழிகளுக்குள் இவனும், இவன் தோழர்களும்
வெந்தணலில் வாட்டி விட்ட சுட்ட பழம் போலிருப்பர்.










திட்டமிட்டு எதிரிப்படை திக்கெட்டும் முட்டி, முட்டி
தட்டுப்பட்ட இடமெல்லாம் தாக்குதலை முன்னெடுக்கும்.
எட்டும் ஓர் அடியினிலும் எதிரி வீசும் எறிகணைகள்
பட்டுப் பட்டு வெடிக்கையிலே பல தோழர் துடித்திறப்பர்.

இத்தனையும் கண்முன்னே இமயமாய் விரிந்திருக்கும்
இவன் விழிகளில் நீர் சிறிதேனும் கசியாது
இறுகிய அகத்தினுள் சிறு தீப்பொறிகள் பூக்கும்
அவை
விழிமூடித் திறப்பதற்குள் விசுபரூபம் எடுக்கும்
விரலிடுக்கில் விசை அழுத்த துப்பாக்கி கனலும்
சடசடென்று வேட்டுகள் செருக்களத்தில் சீறும்.

எடுத்து அடி வைக்கின்ற படைகள் நோக்கிப் பாயும்
குண்டுகளால்......
அடுத்த அடி வைக்கும் எதிரி களத்தில் சாவான்.

இத்தனையும் முடிந்த பின்னால் தோழர் உடல் அணைப்பான்
தேம்பி அழும் நெஞ்சோடு தோளில் மெல்லச் சுமப்பான்.
உயிர் ஈந்த வீரர்களின் உறைவிடத்தே சென்று
தோழர் வித்துடலை விதைத்த பின்
கண்சோர்ந்து காயமது களைத்தாடும் போதே
இவன்
மெய் தாங்கும் விழுபுண்ணை மெய்யென்று உணர்வான்.

விருந்திட்டு இவனைத் தேற்ற வீரத்தாய்கள் காத்திருப்பர்
இவனோ....... மருந்திட்ட காயம் ஆற
மணித்துளிகள் போதுமென்பான்.
குறைந்த நேரம் ஓய்வெடுப்பான்
மீண்டும் விரைந்து காவலரன் நிறைத்திருப்பான்.










தோற்றோடிப் போன படை காற்றோடு கதை சொல்லும்
ஆட்காட்டிக் குருவிபோல ஆர்ப்பரித்துக் கெலிகள் வரும்
எம்மினத்தைச்....... சாக்காட்டி தொலைப்பதற்காய்
சரம், சரமாய் செல்லடிக்கும்.

மேற்கொண்டு..... "வானத்தில் பொம்மர்" என்று
வாய் சொல்லி முடிக்குமுன்னே
வாரணத்தில் வந்த படை வரிசையாகக் குண்டெறியும்.
"ம்" என்றால் எழுநூறும், எண்ணூறும்
"அம்" என்றால் ஆயிரம் ஆகாதோ?"
என்றான் கவி படைக்கும் காளமேகம் அன்று,

"ம்" என்றால் ஏழாயிரம், எண்ணாயிரம்
"அம்" என்றால் ஆயிர பதினாயிரம்
குண்டுகள் குதறும் போர்க்கால மேகமிது!
என்கிறாள் ஈழவள் இன்று

இதுவொன்றே
இயல்பென்ற வாழ்வான நிலையில்
இக்காவியக் கதை நகரும் - நிகழ்
காலங்களின் உயிர்ப்பாய். அவ்வழியில்....

நாட்காட்டி தன்னிதழைப் பொலபொலென்று உதிர்க்கும்.
நடக்கின்ற அனர்த்தங்களோ சிறிதேனும் குறையாது.

No comments:

Post a Comment