Sunday, October 25, 2009

அங்கம் 17

பேசத் தெரியாத பிள்ளை

ஈன்றவள் அணைப்பும், இட்ட முத்தமும்
ஈந்த விடையாய் ஏற்று நகர்ந்தான் தீரப்புலி
அவன் கால்கள் உந்திட,
ஈருந்திப் புரவி மெல்ல மெல்ல
வேகம் எடுத்தது.

உறுதி நிறைந்த உன்னத தேகம்
தெரு முனையில் குறுகி மறைந்தது.

தாயின் ஈரவிழிகள் உலர்ந்தன.
இதயம் சிலுவை சுமந்தது.

தாவி ஓடி அண்ணன் காலொடு
கறுப்பன் போட்டி இட்டது.
'ஆவி துடிக்கும் அன்னை தனியே'
என்றே உணர்ந்ததும் நின்றது.

தாய் மண்ணைக் காக்க
அண்ணன் போக - அவன்
கண்ணைக் காக்கக் கறுப்பன் வந்தது.

தாயின் காலடி உரசும் சேய் போல்
ஒட்டி அருகே அமர்ந்தது.
மேரியின் வேதனை உணர்ந்து, - அதனில்
வாரித் தன்னை இணைத்தது.

இதனை உற்றவள் தன்நிலை தெளிந்தாள்.
கறுப்பன் தலையை மெல்ல வருடினாள்.

உடனே....
கள்ளம் இல்லா வெள்ளைப் பிள்ளை
உச்சியிலிருந்து உருகி வழிந்தது.
தத்துப் பிள்ளையாய் தாவித் தாவி
தன் அன்பினை வள்ளலாய் சொரிந்தது.

தாயைக் காத்தல் தன்பணியென - அது
தன்னுள் நினைத்தது. - தொடரும்...
காவல் பணியில் நாயகனாகத்
தன்னை நிறைத்தது.

மகவைப் பிரிந்த மாதா துயரம்
மாபெரும் கடலாய் ஆனது.
பிரிவுப் படலம் தொடர்கதை எழுதி
உறவு கொண்டாடிச் சிரித்தது.

தனயன் முகத்தில் தோன்றிய உணர்வு,
கரிய முகத்தின் அரிய சிவப்பு...
கடந்த நாட்களின் கலங்கரை போல
அன்னை அகத்தில் நிலைத்தது.

நினைவுச் சுழிகள் திரும்பத் திரும்ப
ஓரிடத்தில் வலயமிட்டன.

பிள்ளை எண்ணம் பொழுதைக் கரைத்தது
இரவு தொடரும் ஆட்சியில் நிலைத்தது.

வீட்டினுள்ளே படுத்திருந்த
கறுப்பன் எழுந்து கதவை பிராண்ட,
வினயத்தோடு பல்லிகள் கொழிக்க,
வீட்டு முகட்டில் கோட்டான் அலறல்.
மனதிடை ஏதோ மருகி எழுந்தது.

கலவரத்தோடு மேரி எழுந்து கதவின் தாளைத்திறக்க
தோட்டக் கிணற்றின் மூலையோரம்
ஓட்டமெடுத்த வீட்டுக் கறுப்பன்
நாட்டு நாய்கள் ஊளை கேட்டு
கூட்டுச் சேர்ந்து மெட்டுப் போட்டது.

அச்சம் என்பது ஆளரவமின்றி
மெல்ல மெல்ல மனக்கூட்டில் புகுந்தது.

கோட்டான் அலறலும்,
கொடும் பல்லிகள் சொல்லும்,
வீட்டு நாய் ஊளையும், அப சகுனமாகி
சேது அன்னையைச் சஞ்சலப் படுத்தின.

அன்னை மனம் அன்ரனியை நினைத்தது.
சிந்தனை விரிய சிரசு விறைத்தது.
'மகனுக்கு இன்னலா?' மனம் தவித்தது.
இரவி வரும்வரை இரக்கமின்றி இன்னல்
அவளை வாட்டி வதைத்தது.

அதிகாலை,.. சாலை பார்த்து
கலிசூழ சேது அன்னை
கடந்து போகும், ஏகும் போர்புலிகள்
முறுவலித்தனர், முகம் மலர
சுகம் கேட்டனர்.

'ஆண்டவரே உமக்குத் தோத்திரம்.
மகவைக் காக்கும் கர்த்தரே உமக்கு நன்றி'
இதயத்துள்ளே இறையைத் துதித்தாள்.
இருப்பினும்...-
அவள் தாய் தனத்தில் வலியொன்று
தவித்துத் தவித்து தனக்குள் விசித்தது.

என்றுமில்லா அமைதியோடு அன்றைய பகல் கடக்க,
சூரியனும் மேற்கு வானை மெருகூட்டி மறைந்தான்.

'ஞாலத்து வான் தன் கருங்கோலத்தைக் காண்' என்றிட
வெள்ளிகள் நிறைந்தன. விதவிதமாய் நிறத்தன.

கீழே........
தன் மனதைத் தொலைத்துத் தொலைத்து
தென்றல் தவழ்ந்தது.
கோள பூமியின் கொள்ளை அழகெல்லாம்
தழுவி முகர்ந்தது.

ஈன்றவள் உள்ளத்தில் இனம் புரியா உணர்வு
நள்ளிரவு தாண்டி நாழிகைகள் நகர
தூரத்தில் எங்கோ வெடிகளின் ஓசை
'அல்' அதன் அமைதியைக் கிழித்து
துல்லியதாய் கேட்டது.

மணித்துளிகள் நகர்ந்தன.
உலங்கு வானூர்திகள் உறுமி உறுமிக்கடந்தன.
வெள்ளி பூக்கும் விடிகாலை பொழுது
குண்டுவீசு விமானங்கள் கூவிக் கொண்டு பறந்தன.

அன்றைய பகல் தூரத்தில் எங்கோ
அரச படைகளின் ஆங்காரம் மிகுந்தது.

பெற்ற மனமோ பித்தாகியது.
அவளைக் கடக்கும்..
புலிமுகங்கள் மௌனித்துக் கொண்டன.
கலவரம் விழிகளில் ஒளிர்ந்தது.

பிள்ளையர்க்கு சாது பின்னடைவு என்பதே!
அன்னையிடம் தஞ்சமான அன்றைய சங்கதி.

அடுத்த நாட்காலை கொடிதாய் எழுந்தது.
கறுப்பன் சோர்ந்து கவலையாய் இருந்தது.


அன்னை அழைக்க நிமிர்ந்து பின்
நீட்டிய காலில் தலையைச் சாய்த்தது
பேசத் தெரியாத அப் பாசப்பிள்ளை.

என்னவாயிற்று இவனுக்கு? என
அன்னையின் உள்ளத்தில்...
முன்னவன் கவலை முழுதாய் இருக்க,
இன்னதன் நிலையும் இடையினில் சேர்ந்தது.

அண்டை வீட்டு பிலோமினாவும், எதிர் வீட்டு மரியதாசும்
கூட்டுச் சேர்ந்தனர் குசுகுசுத்துப் பேசினர்.
வீட்டுக்கு வந்தர், விடயம் செப்பினர்.

வாயிலும், வயிற்றிலும் அடித்து - அந்த
வயத்தை ஈன்ற வனிதை அழுதாள்.

கட்டிய ஆடையை உதறி உடுத்தி
வெள்ளிக் கம்பிகள் ஓடிய குழலை முடித்து
மருத்துவப்......பாசறை நோக்கி
அப்பாசத்தீ புறப்பட்டாள்.

பின்னால் வந்த கறுப்பனை உறுக்கி,
முற்றத்து மரத்தில் முடிந்து கட்டி,
மரியதாசிடம் கவனப்படுத்தி,
மனித மாதா மகனை நாடினாள்.

கால் போன போக்கில் வீதியில் செல்ல
தாண்டி நின்றது ஒரு தமிழ்புலி வண்டி.
இன்னவளின் நிலையை அறிந்த வேங்கையின்
ஈருருளி அன்னையைச் சுமந்து நகர்ந்தது.

No comments:

Post a Comment