Sunday, October 25, 2009

அங்கம் 21

இருதலைக் கொள்ளி


எழில் மிகு கரைமகள் கலிகளைச் சுமந்தாள்.
அங்கு இங்கென உடல் நலமிழந்தாள்.
பொழில்கள் பொசுங்கின. அலைகள் அழுதன.
கந்தகம் சுமந்து காற்று நொந்தது.
பட்சிகள் சிதறின, வீட்டுநாய்களெல்லாம்
வேட்டோசை கேட்டு வீதிவழி ஓடின.

ஆரியத்தால் உட்புகுந்த கூரிய இழிவுகள்
குலை தெறிக்க ஓடின. சாதியம் மறைந்தது.
உயர்ந்தவர், தாழ்ந்தவர் பேதங்கள் ஒழிந்தது.
தமிழர் மட்டும் தனித்து நின்றனர்.
மதங்கள் ஆண்ட மனங்கள் அழிந்தன.
மனிதம் பூண்ட சிந்தைகள் நிறைந்தன.

முன்னே வீழும் எறிகணைகள்
பின்னே விரட்டும் வேட்டொலிகள்
இதற்குள்
காயம் பட்டும், கதறித் துடித்தும்
உயிரைக் காக்க மக்கள் விரைந்தனர்
கோயில்கள், பள்ளிகள் முகாம்களாகி
அகதிகள் கதைக்கு கருக்களம் கொடுத்தன.

இராணுவ அணிகள் தரைவழி நகர்ந்தன.
அகப்பட்ட உயிர்களை தத்தம் கவசமாய் ஆக்கின.

உலைக்கள வீரர்கள் உண்மையை அறிந்ததால்
தங்களை மறைத்தர்.
எதிர்ப்பின்றி நகர்ந்த எதிரிப் படையதால்
எல்லா இடத்திலும் இழவுகள் நிறைந்தன.

காவிய நாயகியும் அவள் கவினுறு தோழியும்
மூலையில் ஒடுங்கிய முகாமினை வளைத்து
பாரிய இராணுவம் ஆளணி நிறைத்தது.

எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாமென - தமிழ்
சிந்தைகள் எல்லாம் கந்தையாகிக் கசங்கின.

ஆலய அருகே
இராணுவர் கண்டதும் சிறுவர்கள் கதறினர்
அன்னையைத் , தந்தையை இறுக்கிக் கட்டி
பெருங்குரல் எடுத்து வீரிட்டு அலறினர்.

அந்நேரம்
இன்னலை விதைக்கும் இனவாதக் காடையர்
அகதிகள் அனைவரையும்
ஆலயம் விட்டு வெளிவரப் பணித்தர்.

தமிழர் கோழையர் அல்ல
எனினும்
மார்தட்டி நேர் நடக்கும் மல்யுத்தமா இது?
கூர் விழி அசைக்குமுன் உருக்குக் குண்டுகள்
உடலெங்கும் குதறும் இயந்திர களமல்லவா!
உற்றவர் வருவரா? பெற்றவர் வருவரா?
தத்தம் பிள்ளையரை தம் கையால் கொடுப்பரா?
கோயிலின் உட்புறம் உறுதியாய் உறைந்திருந்தர்.

மங்கல நாதம் முழங்கு திருக்கோயில்
மயான அமைதியை மண்டியிட்டு ஏற்றது.

சிங்கள இராணுவர் சினத்திற்கு உள்ளாகினர்.
சுடுகலன் விசையழுத்திக் கர்வம் காட்டி நின்றர்.

மக்கள் மசிய மறுத்தர். மகேசனடி தொக்கினர்
பொறுமை மீறிய
காடைக் கும்பல் கடவுளை மிதித்தது.
ஆண்டவன் சந்நிதியை அழுக்குப் படுத்தியது.

ஆயுத முனையில் ஆண்களை இழுத்து
வீதியில் உதைத்தது.
கணவனும், பிள்ளையும் ஆயுத முனையில்
தாய்மையும், பெண்மையும் தவித்தன.
தலையில் அடித்து அழுதன.

வீரம் இல்லா வேற்றுவர் படையணி
யுவர்களை எல்லாம்
மாபெரும் கயிற்றில் பிணைத்து
தங்களைக் காக்கும்
மனித... கேடயங்கள் ஆக்கின.

பிறிதொரு காடையர் ஆலய உட்புறம்
பெண்களைச் சீண்டி இரசித்தனர். -அதில்
உள்ளத்தை அள்ளிய
கொள்ளை எழில்களை கைதென்ற பெயரால்
வதைத்தனர்.

ஆண்பிள்ளை, பெண்பிள்ளை அல்லாடி அல்லாடி
தாய் மனங்கள் கெஞ்சின, கொதித்தன, தவித்தன.

பெற்றவர் உற்றவர் பெரிதாய் குரலெழுப்ப
எண்ணிரு கன்னியர் காடையர் கரங்களில்
கைதாகிக் கலங்கினர்.
அதில்
காவியக் கோதையும் கலங்கரைத் தோழியும்
கவலை மிகுந்து நலிந்து சோர்ந்தனர்.
கைதுக்கு மறுத்துக் கதறிடும் கோதையரை
கொடும் கரங்களால் அறைந்து
காடையர் மூடிய ட்ரக்கினுள்
திக்கு முக்காடித் தூக்கிப் போட்டர்.

யுவர்களைக் கிழக்கு முகம் நோக்கியும்,
யுவதியரை மேற்கே நோக்கியும் இழுத்து
எதிரெதிர் புறமாய் இராணுவம் நகர்ந்தது.

கணவனின் கைதா? பெண்மகள் கதறலா?
பூரணத்தாய் புலம்பித் தவித்தாள்
குழலியின் அன்னையும் கூடவே அரற்றினாள்

எவரிடம் அறிவது? எங்குதான் செல்வது?
யாரை மீட்பது? யாரை விடுவது?
இருதலைக் கொள்ளியாய் அங்கிருந்து அழுதவளை
ஆதரவாக தொட்டது ஒருகரம்!

No comments:

Post a Comment