Sunday, October 25, 2009

அங்கம் 23

வேங்கையன் பூங்கொடி


சிறிது நேரம் பெரிதாய் கழிய,
வாசிகசாலை வாசற்புறத்திலே
ஓசையில்லா அசைவுகள் தெரிந்தன.

வெளியே செல்ல விரைந்த மங்கையர்
விழிகளில் வியப்பு விரிந்தது.
அவர் மனதிடை மகிழ்ச்சி மலர்ந்தது.
காத்திட வந்த அக்காவலர் கூட்டம்
களப் புலி அணியெனத் தெரிந்ததும்
பேதமையின்றி அவ்வயங்களை நோக்கி
வாமையர் துள்ளி ஓடினர்.
வேட்டுகள் ஒலிக்கும், வீரர்கள் வழிக்கும்
பூட்டுகள் போட்டுப் பார்த்தால்
புரியாத கதையும் புரியும்.

மங்கையர் அனைவரும் மகிழ்ச்சியில்;
துளிர்க்கக் குழலி மட்டும் குமைந்தாள்.
மென்மகள் செல்வியின் புன்னகை உதட்டிலும்,
பொன்னிறக் கழுத்திலும் செவ்வரி கண்டு விசித்தாள்.

அக்கணம்
நோட்டமிட்டிட நூலகம் நுழைந்தான் ஓர் காளை - அங்கு
பாட்டம் கிடந்த பசுங்கிளி பார்த்து -அவனது
நுண்ணிய இழைகளும் அதிர்ந்தன.

அந்த மயங்கிய மலர்க்கொடியின் சுருங்கிய கோலம்
இம்மறவன் உயிரை கிழிக்க
அனலிடை வீழ்ந்ததாய்த் துடித்தான்.
காடையர் கையில் கன்னி மலரா?
கண்களில் கோபம் கொழித்தது.

அவள் கன்னத்தில் பதிந்த கைத்தடங்கள் - இவன்
எண்ணத்தில் வீழ்ந்து வதைத்தன.
செவ்விள மேனியின் நகமுனைக் கீறல்கள்
பெருஞ்சீற்றத்தைப் புலிக்குள் வார்த்தது.
அந்த மெல்லியள் மயக்கமும், மனதிடை உருக்கமும்
மறமன்னவன் மனதை அசைத்தது.

தோழரை அழைத்துத் தண்ணீர் கேட்ட
தளபதி சேதுவை நோக்கி
கொள்கலன் ஒன்றைக் கொடுக்க வந்த
இனியவன் இதயம் பதைத்தான்.
முகத்தில் செவ்வரி ஓடிய
சின்னவள் பார்த்து
சிந்தை நொந்து கசிந்தான்.

மயங்கிய நிலவின் அருகே மறவன்
தயங்கித் தயங்கி வந்தே
கொள்கலன் கவிழ்த்து, குவளை நீரை
அவ்வெழில் நிலா முகத்தில் தெளித்தான்.

நீரது பட்டுத் தெளிந்த குலமகள்
வேல்விழி திறக்கா வாமையாய் நலிந்தாள்.
ஆவி துடித்திட, அழுகை உள்ளிட -அவள்
மூடிய இமைக்குள் கயல்கள் நீந்தின.
ஓரவிழிகளில் ஈர அருவிகள்
இருபுறமாய் தம்மைக் கசித்தன.

செல்வியை அழைத்துத் தேற்ற நினைத்தாள்
சுந்தரப் பூங்குழலி.
பாங்கியைத் தேடிப் பயத்தில் நலிந்தாள்
இக்காவியப் பொன்னலரி.
வீணரை நினைத்துப் பதைத்தாள்
அவள் விழிகளைத் திறக்கப் பயந்தாள்.

கோர நினைவினில் நடுங்கும்
கொள்ளை எழில்மகளிவளின்
மெல்லிய கைகளைப் பற்றி
இந்த வீரத்திருமகன் சிரித்தான்.

ஆண் கரம் பட்டதும் அணங்கவள் கனன்றாள்.
ஆவேசத்தில் ஆர்த்து விழித்தாள்.
கூரியவிழியில் வீரியம் வெளிக்க
பாரைப் பிளக்கும் பூகம்பம் ஆனாள்.

சுற்றிலும் நின்ற விடுதலைத் தோழர்கள்
விழிகளினாலே வியந்து நகைத்தர்.
உற்ற மறுகணம் ஓர்மம் ஒடுங்கிட,
வேங்கையன் பூங்கொடி வெட்கத்தில் சிவந்தாள்.
காண்பது கனவா? சுந்தர நனவா?

கரமதைப் பற்றிய காளையைப் பார்த்தாள்.
கடமையால் அவன் முகம் இறுகவுமில்லை
நாணத்தால் இவள் தலை சாயவுமில்லை.

ஒருவர் விழியில் ஒருவரைப் பார்த்து
இருமனம் கூடி ஒரு கணம் களித்து
உள்ளங்கள் அங்கே உரையாடின.

பார்த்த தோழி பரவசத்தோடு
பார்வையை நகர்த்தி சங்கடம் கொண்டாள்.

'உறுதியும், அறிவும் வாராத வரைக்கும்
உன்நிலை செல்லரிக்கும்"

உழு உரைத்த உலைக்கள மொழியில்
உரம் மிகப்பெற்றாள் அவன் உள்ளக்காவேரி.
பெண்களை மீட்கும் உன்னத பணியது
வெற்றியைத் தந்திடவே இனி அவ்விடம் நிற்பது
ஆபத்தை தருமென இனியவன் செப்பி நின்றான்.
காத்த நங்கைகள் எண்ணிரு மங்கையரை
கண்ணாய் நகர்த்திக் காப்பிடம் சேர்த்தபின்னர்
சேது தோளில் துவக்குடன், தோழர் அணியுடன்
செல்வியைப் பிரிந்து சென்றான்.

எழில்மகள் விழிகளில் ஈரருவிகள் அரும்பின.
வலிகளைச் சுமந்தும் வதனங்கள் மலர்ந்தன.
மண்மீட்பு நோக்கிய பயணங்கள் தொடர்ந்தன.
ஈழமண் மீதிலே இக்காவியகதையின் அங்கங்கள் வளர்ந்தன.

பாகம் 1
முற்றும்.

No comments:

Post a Comment