Sunday, October 25, 2009

அங்கம் 22

கலைமான்

திருட்டும், கொலையும், பலாத்காரமும்
பொருட்டே இன்றிப் புரிந்த ...
கணக்கில் அடங்காக் காடையர் எல்லாம்
தமிழரை வதைக்கும் படைகளில் நிறைந்தர்.
பெண்களை இழுத்து உரசிப் பார்ப்பதும்,
கன்னி மலர்களைக் கசக்கி முகர்வதும்
காமுகர் வாழ்வில் களியாட்டம் தான்.

தட்டி கேட்க எவருமே இல்லை -அரசு
ஊட்டி வளர்த்து உப்பரிகை போட்டது.
மதுவோடு மாதாய் காடையர் மகிழ - தமிழ்
கன்னியர் வாழ்வு களங்களுக்கு ஏகியது.

எண்ணிரு பெண்களும் அரண்டு மருண்டனர்.
பீதியில் விழிகள் பிதுங்கி வழிந்தனர்.
காடைகளுக்குள் கலங்கித் தவித்தர்.
ஒருவரை ஒருவர் இறுகப் பிடித்து
நூலக மூலையில் நடுங்கிக் கிடந்தனர்.

செல்வி, குழலி இருவரை விட்டும்
துடிப்பும், துணிவும் தூர ஓடின.

வெறி பிடித்த ஓநாய்கள் விருந்துக்கு விரைந்தன.
காயமெங்கும் காமமுற்று கண்களால் ஒளிர்ந்தன.
தறுதலைத் தலைவனாய் நின்றவன் கண்கள்
செல்வியின் மேனியை மேய்ந்தது. - கண்டு
அவள் உள்ளம் அச்சத்தால் உறைந்தது.
குழலியை இறுக்கிப் பிடித்துக் குலமகள்
அதில் தன்நிலை நிமிர்த்தித் தேறினாள்.

தலைமை வெறியனின் 'கலைமான்" இவளென
காடையர் குறிப்பாய் உணர்ந்ததும்
எண்ணிரு கன்னியர் நாடியே - அவளைத்
தனியே இழுத்துப் போட்டர்.

ஓவெனக் கோதையர் கதறிடக் கதறிட
தாவித் தாவியே அறைந்தனர், அடக்கினர்.

தனியே பிரிந்த சேயிழை நோக்கி
'கனியே!" என்று காமுகன் நெருங்கினான் - அவள்
விலகி விலகி நூலகம் எங்கும்
நுழைந்து நுழைந்து ஓடினாள்.
வேட்டைக்கு வந்தவன்
ஒருவனா? இருவரா?
மாட்டிக் கொண்டது புள்ளிமான்.

பார்த்து நின்ற மற்றைய மங்கையர் பீதியால் அலறினர்.
பெருங்குரல் எடுத்துக் கூக்குரலிட்டனர்.

கயவர் பிடியில் செந்தமிழ் செல்வி
கடித்து சுவைக்க காமுகன் நெருங்கினான்.

சேதுவின் காதலி சீறி உலுப்பினாள்
கனலிட்ட விழியுடன் காறி உமிழ்ந்தாள்.

காறி உமிழ்ந்தது கயவனைச் சீண்டிட
காவியச் செல்வியின் கன்னங்கள் பழுத்தன.

அடியே அறியா அவ்விள நங்கையின்
அவயங்கள் புண்பட்டன.
இடிபோல் விழுந்த அரக்கன் பலத்தால்
பெண்மை அதிர்ந்தது.

இகத்தில் இதுநாள் அறியா உணர்வு
அவளுள் மிகுந்தது.
முகத்தில் அறைந்த பேயைப் பார்த்து
மலங்க விழித்தது - அவளுடல்
மயங்கிச் சரிந்தது.

அதே வேளை
நூலக அண்மையில் வேட்டுகள் ஒலிக்க
வெருண்ட காடையர் வெளியே விழுந்து
உருண்டு உயிர் காத்தர்.

மயங்கிய பெண்மையை முகரத் துடித்தவன்
உயிரது அலற உடன் விட்டகன்றான்.

காமக் கூத்துக்கு நூலகம் பிரிந்த
படையினர் ஈர்பத்தே!
ஆதலால்
தனியே இருப்பது தம்முயிர் போக்கும்
எனும் நிலை உணர்ந்திட
எழில் மங்கையர் விடுத்து
அங்கிருந்து அகன்று - தம்
படையணி நாடிச் சென்றர்.

மருண்ட மங்கையர் விரைந்து எழுந்தர்.
நங்கையர் மானம் நலமே காக்க
இவ்விடம் விட்டு நகர்தல் நன்றென
சுந்தரியர் தம் சிந்தனை செப்பினர்.

No comments:

Post a Comment