Sunday, October 25, 2009

அங்கம் 19

ஊர்த்தாய் கூற்று

நெஞ்சில் இருப்பவன் நெருப்பெனச் சுட்டால்
கஞ்சமலர் கருகியா போகும்?

கொஞ்சிக் குலவும் காமம் தவிர்த்து
விஞ்சி விறைக்கும் அவனாளுமை பிடித்தது.
கெஞ்சுதல் என்பதை அறியா அவனின்
நெஞ்சு நிறைத்த கர்வம் பிடித்தது.
சிந்தையில் ஒளிரும் காதலை மறைக்கும் - அச்
சிந்தனைச் சிற்பியைச் செல்விக்குப் பிடித்தது.

கடந்த நாட்கள்
காவியக் கோதையின் கண்களை நனைத்திடினும்,
படர்ந்த மனதில் இன்னும் அவனே
பலமாய் பதியமிட்டான்.

நாட்கள் நகர்ந்தன. வாரங்கள் வளர்ந்தன. - பின்
மாதம் ஆகி ஆண்டிலும்பாதி அவதியாய் தாண்டியது.

ஏக்கம் நிறைந்த எண்ணக் குமரியின்
கனவுகள் எல்லை கடந்தன.
அவள்
கண்ணுக்கினியவன் - இக்காவிய நாயகன்
காயம் பட்ட காயம்தேறி
மீண்டும் காவலரன் நிறைத்தான்.

காணும் தருணம்
(அவன்) இறுகியும், (இவள்) உருகியும்
இளநெஞ்சங்கள் துடித்தன.

அதே சமயம்.......
அந்நியப்படை முகாம்களுக்குள்
ஆயுதக் கிடங்குகள் நிறைந்தன.
அடுத்த தொடராய் மாபெரும் அழிப்பிற்கு
ஆயத்தமாகி வளர்ந்தன.

அமைதியைக் கிழி;க்கும் உலங்கு வானூர்திகள்,
ஆகாயம் தமதென்று ஆர்ப்பரிக்கும் அவ்ரோக்கள்,
நீரில், நிலத்தில், நீலவானில்
சாகசம் புரியும் இயந்திரக் கழுகுகள்,
குத்துக் கரணத்தில் குண்டுகள் ஈனும்
சூப்பர் சொனிக்குகள்,
வேவு காவும் வீரியக் குருவிகள் என
பறந்து பறந்து யாழ் குடாநாட்டைக்
குறிப்புகள் எடுத்தன.

பேரினவாதப் புல்லர்களோடு
அமெரிக்காவின் செல்லர்கள் பறந்தனர்,
பயிற்சி பல வழங்கினர்.
கெரில்லாப் போரதை அடக்கி ஒடுக்க
வேண்டிய அனைத்தும் வல்லரசுகள்
மாபெரும் பாரியாய் வாரி வழங்கின.

பாக்கு நீரினைப் பரப்பு வெளிகளில்
நீண்ட பெருத்த பீரங்கிக் கப்பல்கள்,
சாத்தான் போல சாகரம் மீதில்
வீரிய, சூரிய சண்டியக் கப்பல்கள்,
அவற்றைச் சுற்றிச்சுற்றி விசைந்து திரியும்
வீரியம் மிகுந்த ஆயுதப் படகுகள்,
இவை வலிமை குறைந்த மக்களை அழிக்க
வாரணம் வந்த வல்லசுரர்கள்
இவைகள் நடாத்தும் ஊழிக் கூத்தை
ஆயிரம் ஆயிரம் பாயிரம் எழுதலாம்.

புலிகளின் கையிருந்த
யாழ் குடாவை குதறிப் பிய்க்க
காடையர் கூட்டம் ஆயிரக்கணக்கில்
ஆழிக்கப்பல்களில் காத்துக் கிடந்தனர்.

கரைகளில்
ஆற்றுவாய், ஆலடி, மதவடி, பாலம்,
முனைகடல், மணல்வெளியென எங்கெங்கு எதிரிக்கு
இறங்குதளம், ஒதுங்குமுகம் இடரின்றி இருக்கிறதோ
அங்கெல்லாம் புலியணியின் துணைப்படைகள்
எக்கணமும் எதுவுமென்று ஏற்பும், எதிர்பார்ப்புமாக
சின்னச் சின்னக் கைக்குண்டுகளோடு காத்திருந்தர்.
போரிட்டு செயிக்க அல்ல, இவ்விழிப்புக் குழு
ஊர்த் தூக்கம் கலைக்க.

வீதிகள், பொதுவிடங்கள், நாற்சந்தி நிலைகள்
நன்நூல் அகங்களருகென
பொதுமக்கள் காப்பிற்கு பதுங்கும் குழிகள்
புலிகளின் பார்வையில் புதிதாய் முளைத்தன.
அதற்காக....
கர்ணனை விஞ்சிய கற்பகத் தருக்கள்
உயிரைக் கொடுத்து தங்களை ஈந்தன.

போரை எதிர்நோக்கும் கூரிய வாழ்விலும்
விழாக்களும், கடவுளர் உலாக்களும் நிகழ்ந்தன.
பாரம்பரிய விழுமியங்களோடு பைந்தமிழ் கலைகளும்
வளர்ந்தன.

அன்றும்...
மெய்யாய் நிறைந்திருக்கும் முத்துமாரியம்மனுக்கு
ஊர் கூடித் தேரிழுக்கும் ஒய்யாரத் திருவிழா
காலத்திற்கு ஒவ்வாத கார்முகிலி வான் நிறைக்க
போரிற்குப் புறப்பட்டாள் முத்துமாரியம்மை.
தேர்ச் சில்லு நகரவில்லை
ஊர்கூடி இழுத்தது.
சாது சாய்ந்து தேர் நிலத்தில் பதிந்தது.

காண்டீபனைக் காக்க கண்ணன் பதித்த தேர்போல்
அங்கொரு அறிகுறி ஊருக்குத் தெரிந்தது.

ஊர் கலங்கித் தவித்தது. கேடு வரப் போகிறதோ?
பதற்றமுற்ற இச்சேதி வாய்ப் பந்தயத்தில் குதித்தது.
இதனை உற்றவரும், கேட்டவரும்
ஊர்த் தாயின் கூற்றாக ஏற்றுக் கலியடைந்தர்.
ஆதலால் ஊருக்குள் எப்போதும் இல்லாத
அச்சம் ஒன்று நுழைந்தது. - அது
எல்லோர் உள்ளத்திலும் உச்சம் பெற்று நிலைத்தது.

No comments:

Post a Comment