Sunday, October 25, 2009

அங்கம் 12

நஞ்சணிந்த நாயகர்

சேது மூளை கலங்கி விழித்தான்.
கடைசி நேரக் கள நிலைத் திட்டம்
முத்தளபதியர் பிரிவுகள் மாறின.
முக்கியமான சாதனம் சுமந்த சிலர்
நலிந்த திசைக்கு நகர்த்தப் பட்டதால்
மிதிவெடி தாண்டுமுன் மதி வெடித்து அலைந்தது.
கத்தி முனையில் கால் வைத்தாற்போல்
களத்தில் வீரர் நிலைமை!

மிதிவெடி தாண்டுதடைக்கு எங்கே போவது?
சிந்திக்கும் வேளை இதுவல்ல என்றே
சிங்கியைக் கடித்தனர் சீரிய இருபுலிகள்!

பற்களின் இடையே சயனைற் குப்பிகள்
சடசடத்து உடைந்தன- அவை
அப்பாலும், இப்பாலும் அகல முடியாது
இக்கட்டு நிலையிருந்த தோழர்கள் இதயத்தைக்
கசக்கி காயப்படுத்தின.

கண்ணாடித் துகள்கள் காவிய வீரர்களின்
வாய்களில் கீறி தம் கைவரிசை காட்ட
விசமது வேகமாய் அவ்வேங்கையர் மெய்களில்
விரைந்து பரவியது.

கை, கால்கள் குறண்டின.
கழுத்து நரம்புகள் விம்மிப் புடைத்தன,
சுவாசப்பை விரியாது மூச்சுகள் முனகின.
இருப்பினும்......
தாயகத்திற்காக ஆகுதியாகும் பரவசத்தோடு
தோழர்களைப் பார்த்த
அந்த...... வேங்கையர் விழிகள்
வெற்றியைக் கூறி வெறித்து அடங்கின.

இடமும், வலமும் இணைந்தே நகர்ந்த
இளைய புலியரின் இதயங்கள் வெடித்தன.
விம்மி ஒரு கணம் வெதும்பித் துவண்டன.
தும்மி முடிக்கும் ஒரு கண வேளைக்குள்
துயரம் இறுக உள்ளங்கள் உறுதி பூண்டன.
-------


-------

[color="#4169E1"]தலைசாயா தகவல்கோபுரம்[/color]

சூரிய விளக்குகள் சுடர் இழந்திட
எதிரிப் படைகளின் பிடரிகள் கலங்கின.

துயின்றவரோடு- புலி
வந்தாச்சென அரண்டவர் பாதி!
கையில் கிடைத்த ஆயுத பலத்தால்
தம்மைக் காக்க விழைந்தனர் மீதி!

தகவல் கோபுரம் தலை சாயாததனால்
அரச படைகள் தகவல் செப்பின.

பலாலியில் இருந்து கெலிகள் பறந்தன.
வாரணப் படைகளுக்கு வானலை சேதிசெப்ப
உடனடி நடவடிக்கை கடலில் எழுந்தது.

முக்கி, முக்கி குறிகளற்று குண்டுகளைக்
கரைக்குத் துப்பின.

விடமுண்ட தோழர் உடலங்களை
வெடிப்பூக்கள் பரவிய தரையினில் கிடத்தி
வெடிகளின் ஓசை துரிதமிடத் துரிதமிட
வேற்றுவர் தடத்தை வேங்கைகள் தாண்டினர்.

திடீரென ஒளிக்கோலம் சூழ மிளிர்ந்தது.
வௌ;வேறு திக்காக சூரியச் சுடர்கள்
கொழுந்து விட்டன!

கடந்த பகலில்
புதிதாய் முளைத்த இரவுச் சூரியன்கள்
வேவு புலிகளை ஏமாற்றிச் சிரித்தன.
தற்காப்பு எடுக்க முடியாத இக்கட்டுநிலை!
'விளக்கை அடியடா!'
எனும் ஆணை எழுமுன்
வீரியத்தோடு சுடுகலன்கள் சுழன்றன.

ஒளிசிந்திச் சிரித்தவை ஓய்ந்து செத்தன.
ஒரு மூச்சு விட்டு உடல் நிமிருமுன்
விண்ணிருந்து ஒளி பறந்தது.
உக்கிரம் நிறைந்த உலைக்களமதை
பகலாய் மாற்ற
இயந்திரப்பறவை பிரயத்தனம் செய்தது.

தொடர்ந்து....
உலங்கு வானூர்திகள் உறுமி உறுமி
குண்டுகளை உமிழ,
புலிகளுக்கு நிலைமை சாதகம் இல்லையென
மூன்று தளபதியரும் முடிவினை எடுத்தர்.

நிதர்சனம் அறிந்த பெரிய தளபதி
சேதம் தவிர்த்து
உழுக்களின் குழுக்களை வெளிவரப் பணித்தார்.
ஒவ்வொருவராகப் பின்னே நகர்ந்து
தங்களைக் காத்து வெளிவர முனைந்தர்.
உயிர் சேதத்தையும், மெய் காயங்களையும்
தவிர்க்க இயலாது தமக்குள் ஏற்றர்.

நீரிருந்தும், நிலத்திருந்தும்,
நிர்மல வானிருந்தும்
அரச படைகள் அட்டூழியமிட்டன.

சகாக்கள் திரும்பிய சஞ்சல நிலையால்
சேது தனக்குள் மாய்ந்து மருகினான்.

சிந்தை, செயல்
சக தோழர்களைக் காக்க- அவன்
தன்னைக் காக்கும் தன்நிலை மறந்தான்.
அந்நேரம், முன்னரன் எதிரியின்
கனரகத் துப்பாக்கி கனலத் தொடங்கியது.

குண்டுகள் சிதறின. அதிலொன்று
சேதுவின் கன்னத்தருகிருந்த
நாடிப் பரப்பை நறுக்கென்று துளைத்து
அந்தச் செருக்களப் புலியை செகத்தில் வீழ்த்தியது.

No comments:

Post a Comment