Sunday, October 25, 2009

அங்கம் 8

உரியவன்

உயிரின் தேடல் விசாலமாக
உயரிய இலட்சியம் உளத்தைக் கவரும்.
நாட்கள் தாண்டும். நாளைய பொழுது
நயனம் நிறைக்கும் நாயகன் வருவான்.
தினம் தினம் மனதில் கனமிடும் ஏக்கம்.


காகித மடல்களில் மூடிய இரகசிய கனவுகள்
தேக்கு மரப்பெட்டியின் மூலையில் ஒடுங்கும்.

செயல்களில் மாற்றம். சேவையில் புது நாட்டம்.
சிந்தனையில் செழுமை. வதனத்தில் தனி வசீகரம்.
ஆனால் .
உள்ளம் சிந்தை பறித்தவனின்
சிரித்த முகம் வேண்டும், வேதனை செய்யும்.
அந்த வேங்கை மைந்தனின்
வரவுக்காக -இந்த
மங்கை மைவிழிகள் கரையும்.

ஆவல் பொங்கும். அறிவை மீறும்
குறி பிழைத்திடின் உயிரைக் கசக்கும்.

கருகிடும் நாட்கள் காதலை வளர்க்கும்
காரிகை இவளின் கதை இதுதானே!

பதினை பத்து நாட்கள் ஆனதா?
விதி கனைத்து வினாக் குறி இட்டதா?

காவியக் குமரியின் கைகளைப் பிடித்து
கரைந்திடும் கணங்கள் கவிதை பாடின.

எதிரியைப் பொருதும் புலிவீரர் காண்கையில்
நெஞ்சத்தில் மாபெரும் சோதனை. - இவள் கனவு
மஞ்சத்தை ஆளும் அவனைக் காணாமல்
உருகிடும் இதயத்தில் ஆயிரம் வேதனை.

தெருவில் ஈருந்தி இரதத்தினில் தேவதை
மறுமுனைப் பள்ளத்தில் மானசீக மன்னவன்.
கால்களின் நடுவே உருளியை அழுத்தி
கைப்பிடி இறுக்கும் காரியம் புரிந்தான்.

கருகிய பொழுதுகள் அவள் உயிரிடை இட்ட தீ

அவனைக் கண்டதும்
புனலிட்ட பூக்களாய் உயிர்த்தன.

ஆவலோடு அவடம் வந்த ஆரணங்கு செல்வி
தாவலுடன் ஈருந்திதனை விட்டிறங்கி நின்றாள்.

அரியவன்! .
உயிருக்கும் உறவுக்கும் உரியவன்!

'கண்டேன் செம்மலை" உணர்வுகள் குதித்தன.

ஆவலும் அதை அடக்கும் ஆளுமையும்
சிந்தைக் களத்தில் சண்டைகள் இட்டன.
கை,கால்கள் குளிர்ந்திட,
இரு கன்னங்களும் சூடேறிச் சிவக்கும்
ஒப்பில்லாச் சங்கதி ஒன்றங்கு நிகழ்ந்தது.

அவன் விழிகள் இவளையும்,
இவள் கயல்கள் அவனையும்
ஆளுமையாய் ஈர்த்தன.
புருவங்கள் துடித்துப் புதுக்கதைகள் பேசின

புறச்சூழல்.... .
ஒரு கணம் தான் சுதாகரித்து வென்றனர்.

'பேசலாமா?" .
பிறிதொரு யோசனை
சேதுவின் மனதிலே,
குறுக்கலாய் ஒன்று 'கூடாது" என்றது.

கடமை காத்திருக்க காதலுக்கு என்ன வேலை?
எண்ணமதை எறிந்ததாய் இளையபுலி நினைத்தான்;.

'என்ன பேசலாம்?" செல்வியவள் சிந்தனை.
சிந்திக்க தெரிந்தளவு செயலுக்குத் துணிவில்லை.
வந்தனை செய்யக் கூட முடியாத விந்தை நிலை
இந்தப் பருவப் பாவையிடம் எவர் செய்த மாற்றமிது?

வினாடிப் பொழுதுகளில்
தன் நிலை தேற்றி முறுவல் பூத்தவன்
அகன்று செல்ல அகங்கள் துடித்தன.
சென்றவன் திக்கை நின்று பார்த்தவள்
நெஞ்சம் அவன் பின்னோட
நலன்புரி சங்கம் ஏகினாள்.

இந்த நாடகம்
இருவருக்குள்ளா?
இன்னிரு சோடிக் கண்கள் மறுத்தன.

No comments:

Post a Comment