Sunday, October 25, 2009

அங்கம் 20

அந்தரவான் கந்தக முட்டை


சிங்கள இனவாதம் பெரும் சினம் கொண்ட ஒருபாகம்
யாழ் குடாவின் வடகரையோரம்.

மனவலிமை மிகுபுலியர் அணித் தலைவனோடு
செயலாற்று வீரர் பலர் செகம் கண்டதும்,
முப்படைகள் கக்கு குண்டில் முகம் கொடுக்கையில்
உப்புடைக் காற்றுரசி உரம் பெற்றதும்,
வடமராட்சிக் கரைகளுக்கே உரித்தானது - இது
வரலாற்றுச் சுவட்டுள்ளும் குறிப்பானது.

கடலோடு விளையாடிக் காயத்தில் உரமேறி
மிடுக்காக வாழும் இம்மக்கள்
விடுதலை வேங்கையரின் அத்திவாரக் கற்கள்.
ஆதலால்;
வடமராட்சி என்பது ஆளும் வர்க்கம்
வெறுக்கும் வைரியாகி வளர்ந்தது.

இவ்வுரம் ஊறும் ஊர்கள் அழிக்க, உலகெலாம் கையேந்தி
ஆளும் வர்க்கம் அருந்திட்டங்கள் வகுத்தது.

ஓரிரு வாரங்களில்..
இராணுவ ஒத்திகைகள் முன்னேறு முனைப்புகள்
கரையோரம் எங்கெங்கும் அரங்கேறின.

பயங்கர வாதம் அழிப்பதாய் பகல் வேசம் போட்டு
பாரெங்கும் அரசு பல்லிளித்து நடித்தது.

ஓர்மம் மிக்க ஒப்பில்லா மக்களை
ஒழித்துக் கட்ட அரச பயங்கரத்தின்
ஆயுதமுனைகள் கூர்மை மிகுந்தன.

இராட்சத அவ்ரோக்களில் பெற்றோல் பீப்பாக்கள்
அத்தோடு அமிலங்கள் கலந்த அழுக்குத் திராவகம்.
குறியின்றி ஏகும் கனரகக் குண்டுகள்,
உறுமி உறுமி உருக்குப் பறவைகள் எறியும்
கந்தகக் கணைகளும் தத்தம் பலம் காட்ட,
எங்கே எதுவென்று குறிக்க முடியாது
நாற்புறமும் கந்தகப் புகையோடு
கட்டிடப் புழுதியும் எழுந்து விரிந்தது.

தரைப்படை , கடற்படை, மேவிய வான்படை
மூர்க்கர் ஆணைக்குள் முழுமூச்சானது.

போரியல் என்பது தமிழர் வாழ்வியல் பாடம்.
பின் வாங்கல் என்பது
அவதந்திரத்தை வெல்லும் போரின் உபாயம்.

மக்களை மனதிடை சுமந்த மறவர்
அழிவகள் தவிர்க்க விழைந்தனர்.
தமிழ் உயிர்களை நினைத்து எதிரியைப் பொருதும்
உலைக்கள நிலையைத் துறந்தனர்.
பல் உயிர்களைக் காக்கும் உன்னத பணிக்கு
தங்களை மாற்றிக் கொண்டனர்.

எதிர்ப்புகள் இன்றி காவலரன் கடந்து
இராணுவம் ஊருக்குள் நுழைய
இராட்சதப் பறவைகள் அந்தர வானில்
கந்தக முட்டைகள் இட்டன.
அங்குல நகர்விற்கும் ஆயிரம் எறிகணைகள்
வாரணமிருந்து ஏகின.

மனவலு இழந்த மோடையக் கிலியரால்
பல்குழல் சுழல்கள் சிவந்தன.
அதை உறுதிப் படுத்திச் செல்லக் கெலிகள்
உயரிய கலிபரை முடுக்கின.

இதன்பால் எழுந்த கந்தகப் புயலொடும்,
இரும்புத் துகளொடும்
அந்தரித்துத் தமிழினம் அவதியுற்றது.

குண்டுகள் வீழ்ந்து குதறிப் பிய்த்தது
குவலயப் பரப்பை மட்டுமா?
அன்னை வயிற்றுச் சின்ன உயிரிருந்து
அந்திமகால சருகுகள் வரைக்கும்
தேடித்தின்று செங்களப் பேயானது.
பதுங்கு குழிகள்
மிஞ்சிய மக்களைக் காத்தன.

அதே நேரம்
தென்மேற்குத் திசையிருந்து உள்ளிட்ட ஊனப்படை
அங்குலம் அங்குலமாய் ஊருக்குள் நுழைந்தனர்;.

ஊருக்குள் நிலைத்திருந்த இன்னொரு பிரிவினர்
ஊரின் மத்திக்குள் தம்பலத்தைப் பரப்பினர்.

மக்கள்
அங்கங்கள் தெறித்தும், குடல்கள் சிதைந்தும்,
மண்டைகள் சிதறியும்,
மாகோரச் சாக்களம் அம்மண்ணிலே நிகழ்ந்தது.

எதிர்ப்பில்லா நகர்வுக்கே இந்நிலை என்றால்?.......

எங்கிருந்து எமன் வரவு?
எத்திசையால் அவன் நகர்வு?
செங்கடல்கள் கொப்பழிக்க செந்தமிழர் இடம் பெயர்ந்தர்.

தேக்கிய ஆவனமும், தூக்கிய தோள்பையும்
நோக்கிய திசையறியாது அகதியாக நகர்ந்தனர்.

தீங்கிழைக்க என்றே பிறந்த ஆங்கார வல்லூறுகள்
ஆகாயத்திலிருந்து எரிதழல்கள் உமிழ, உமிழ
மனையிழந்த மக்களெல்லாம் கோ உறையும் இல்லிலும்,
நாமகள் அகத்திலும் கூடிக் கூடி முகாமிட்டர்.

பூங்குழலி குடும்பமும், செல்வியின் சுற்றமும்
அண்டை, அயலென சூழ்ந்த உறவுகளும்
மிரட்சியோடு, உயிரைக் கையில் பிடித்தபடி
உமைபாகன் காலடியில் உறைத்துப் போயிருந்தர்.

No comments:

Post a Comment