Sunday, October 25, 2009

அங்கம் 13

உலுக்கும் அத்தாட்சி

வண்டமிழ் மண்ணில் குண்டுமழை பொழிந்தது.
வல்லாளர் ஊரின் மேல் எறிகணைகள் அதிர்ந்தன.
வான் தாக்குதல் வலியது, ஆகையால்
புலிகள் நிலமகள் புதருக்குள் ஒதுங்கினர்.

மக்கள் மனைகள் கற்குவியல் ஆகின.
ஒதுங்கும் உயிர்களைப் பதுங்கும் குழிகள் காத்தன.

படைத்தவன் இடத்தே மன்றாடிக் கிடந்த
பதுமைகளிடையே பைங்கிளி பதைத்தாள்.
நேற்றைய நாள் நகர... நகர..
விட்டு விட்டு அவள் வலது கயல் துடித்தது.

உறக்கம் வராத இரவுப் பொழுதிலே
நுண்ணிய உணர்வு நலிந்து, நலிந்து
சஞ்சலச் சிலுவையைச் சுமந்தது.

ஏன்? என்று அறிய முடியாத
அகத்தில் நிலைத்த அந்த வேதனை!
பார்த்துத் தாய் கூட இவள்
தவிப்பை ஏன்? என்று கேட்டாள்.

தன்நிலை அறியாத தத்தை எதுவென்று சொல்வாள்?
அந்த அதுவே எதுவென்று புரியாத போது!!

நேற்று முன்தினம்
கண் நிறைத்த இவள் கனவு மன்னவன்
ஏற்ற பொறுப்புகள் என்னென்ன என்று- இந்த
எழில்நிலா அறிவாளா?

நள்ளிரவு தாண்டி நகர,
நடப்புகள் என்னவென்று தெரிந்தது.
நங்கைக்கு தன் மனநாயகன் இருப்பும் புரிந்தது.

இரவிரவாக வெடிகளின் ஓசை
இதயத்தைக் கிழித்துவதைத்தது.
உறவை எண்ணி இருந்தவள் உள்ளம்
உவகை இழந்து தவித்தது.

விடிவெள்ளி முளைக்க விடுதலைப் புலிகளின்
பிக்கப் ஓரிரண்டு வீதி வழியே பீறிட்டோடி
பீதியைக் கிளப்பி மறைந்தது.
ஊரே விழித்து வீதியில் நின்றது.
இவள் என்ன விதிவிலக்கா?

இருளும், ஒளியும்
இரண்டற கலந்த இளைய காலை
இவளைக் கடந்தது நாற்சில்லு ஊர்தி
வேகமாய் நகர்ந்த வாகனக் கதவின்
ஓரப்பரப்பெங்கும் இரத்தப் பிசுபிசுப்பு!

கண்கள் கண்ட இக்காட்சி இனி அவள் குலையை
உலுக்கும் அத்தாட்சி ஆகுமென்று அணங்கிவள் அறிவாளா?

ஊர் திகில் கொண்டு வெளிச்ச ஆடைகட்ட
சூழ்ந்த....
போர் மேகம் கொடையில் கர்ணனை வென்றது.
தொடரும் ... கண்ணின் துடிப்பு
கன்னியின் எண்ணத்தில் கலவரக்கதை எழுத,
கரைந்த பொழுதின்
நடப்பியல் கனத்த இன்னல்கள் பகிர,
காயம் பட்டவர் யார்யாரென
விதியோ! கண்ணிகள் வைத்திருக்க,
இந்நிலை விடுவிக்க வருபவர் யாரென..
விலகும் கணங்கள் கேட்டுச் செல்ல.......

நாளில் பாதி பதுங்கும் குழிக்குள்
சாயங்காலம் சத்தம் குறைந்தது.

ஊர் முழுக்க போர் காயங்கள்!
மனிதர்கள், விலங்குகள், மாளிகை, கோபுரம்
விதிவிலக்கின்றி காயம் பட்ட கணக்கு ஏராளம்.

புண்பட்டவரும் சந்திவந்து
புதினம் கேட்கும் அன்றாட வாழ்நிலை!
முதல்முறை என்றால் அல்லவா
அரண்டு ஒதுங்குவதற்கு!....
சேதி கொண்டு தோழி வந்தாள்.

நண்பியைக் கண்டதும் கண்கள் கலங்கின.
சேதியைக் கண்டம் தனக்குள் தடுத்தது.
பாங்கி ஒருத்திக்கு படுகாயம் எனப்
பூரணத்தாய்க்குப் பொய்யை உரைத்தாள்.

குழலி முகத்தைக் காணக் காண
பூரணம் பெரிதாய் கவலை கொண்டாள்.
இந்நிலை உற்ற பெண்மகள் தாயை ஓரங்கட்டினாள்.
ஓர்கை இழுத்துச் சூழ்நிலை மாற்றினாள்
அன்னையைத் தவிர்க்க என்னென்னவோ செய்தாள்.

புதிதான பெண் நடப்பு புதிராக இருப்பினும்
பெரிதாக எண்ணவில்லை பெற்றெடுத்த பெருந்தகை!
ஆதலால்....
போர் புதினம், ஊர் புதினம் அறிய
தந்தையொடு, தாயும் தலை வாசல் ஏகினாள்.

உள்ளே...
சாளர வழியாக உள்ளேகி மாருதம்
மங்கையர் மத்தியில் உலவியது.


ஆளரவம் அணைந்ததும் சகியை அணைத்தாள் குழலி
விசித்திரமாய் இவள் நோக்க விளக்கமின்றி
பேச்சினிலே தெளிவுமின்றி திக்கித்திணறித்
தவித்தாள் சேதி சொல்லும்தோழி
எதற்கென்று தெரியாது எழிற்செல்வி விழித்தாள்.

'என்னவென்று சொல்லேன்டி?'

'என்னவென்று சொல்வேன்?
ஒப்பில்லா உன் காதலுளம் எப்படித் தாங்குமடி?'

பாங்கி வாய் முணுமுணுப்பில் பதறினாள் பைங்கிளி
'என்னவர்க்கு.......'
செல்விக்கு சொற்கள் வெளிவர மறுத்தன.

'காயம் பட்டவர் காலனுக்கு அருகிலாம்!
ஊர் முழுக்க இதுதான் பேச்சு!'
கேட்கக் கேட்க கேவல் எழுந்தது.

காயம் பட்டவர் காலனுக்கு அருகிலா?
எதையும் கேட்கும் புலனதை ஏந்திழை இழந்தாள்.
மெல்ல மெல்ல கண்கள் இருள
மேற்கொண்டு எதனையும் உணராது விறைத்தாள்.

சேதியதனைப் பாதி பகருமுன்
மூர்ச்சையாகும் அப்பேதையை
அருகிருந்தவள் அணைத்தாள், தேற்றினாள்.
தலையை வருடித் தைரியம் சொன்னாள்.

அரற்றிப் பிதற்றி அழ முடியாத
அன்புப் பாங்கியின் அகநிலை அறிந்தவள்- மேலும்
அத்தையலை நோக்கும் தைரியம் இழந்தாள்.

காதோரம் மெல்ல
'கலங்காதே செல்வி கடவுள் இருக்கிறார்."
என்றே கூறி பிரியசகியைப் பிரிய மனமின்றி
மெல்ல அசைந்து மௌனமாக அகன்றாள்.

No comments:

Post a Comment