Sunday, October 25, 2009

அங்கம் 18

விடைபகரா வித்தகன்

வார்த்தைகள் இன்றி அலைந்த மௌனம்
வலிகளை வளர்த்துப் பெருத்தது. - நீர்
கோர்த்த கண்கள் குளங்களாகி
மெல்லியள் நிலையை உரைத்தது.

இருவருக்குள்ளும் இடைவெளி ஓங்க
இனிமை குமுறி அழுதது.
காதல் என்னும் காவியம் அங்கே
கலங்கிக் குழம்பித் தவித்தது.

அழுகைக் குரலது அவ்விடம் மேவ
அம்மா ஓடி வந்தாள்.
தன் மகவை வருடி உச்சி முகர்ந்து
மனதின் உணர்வைப் பகிர்ந்தாள்.

அவன் காயம் பட்ட காயம் தொட்டு
கண்ணீர் உகுத்துக் கரைந்தாள்.
கண்ட கணத்தில் அன்னையென்று- அப்
பெண்ணை உணர்ந்தாள் செல்வி.

தலையில் இருந்து கால்வரை தடவி
தனயன் தேகம் நோக்கி நிமிர்ந்தவள்
உருகும் சிலையென தவிப்புடன் நின்ற
தாரகை கண்டு துணுக்குற்றாள்.

கண்களின் முன்னே நின்றவள் மெல்லக்
கருத்துக்குள் அடர்ந்து நுழைய
இன்னொரு புறத்தில் தாயவள் மனதில் ஓர்
நுண்ணிழை தன்னால் அவிழ்ந்தது.

தாய் கண்மணியில் கேள்வி கோர்த்து
தன் கண்மணியைப் பார்த்தாள்.

மௌனமாய்க் கண்மூடி, மனதிற்குள் போராடி,- சேது
விடை பகராத வித்தகன் போலானான்.

அவ்விடத்தே..
சொல்லுக்குள் அடங்காத சங்கடம் நெளிந்தது.
செல்விக்குத் தன்நிலை சஞ்சலம் மிகுந்தது.

மணித்துளிகள் மௌனத்திலும்,
விழிகள் பேசத் துணியும் விநோதத்திலும் நகர்ந்தன.

காலதேவன் கணக்கில்
கூட்டல், கழித்தல் பிழைக்குமா?

பேசிப் புரிந்திடப் பொழுதைத் தந்து
சந்தர்ப்பம் கொடுத்துச் சறுகிப் போனவள்
சங்கடம் தீர்க்கவும் வந்து சேர்ந்தாள்.

உள்ள நிலையை உணர்ந்து கொண்டவள்
உதவி செய்வதே நட்புக்கு அழகெனும்
இயல்பு நிலைக்கு இலக்கணம் ஆகினாள்.

'நேரம் ஆகிறது போகலாமா?'
சகியை நோக்கி சகியவள் வினவ
சடுதியில் ஏற்று ' தலையைச்
சட்டென ஆட்டினாள் செந்தமிழ் சேயிழை.

தலைதான் ஆடியது
தறிக் கெட்ட மனமோ.. சேதுவை நாடியது.

கண்கள் மூடிய காளை,
'நேரம் ஆகிறது'
எனும் சொல்வலி கேட்டு
அகத்தினில் துடித்துப் புறத்தினில் விழித்தான்.

அந்நேரம் .
சேயிழை அவளும் வாயிலாக் மடந்தையாய்
'ஓம்' அசைவில் அவசரம் காட்ட
இன்னல் இடியாய் இவனுள் விழுந்தது.

வஞ்சியர் இருவரும் வந்த வழி ஏகினர்.
கொஞ்சுதமிழ் கோதையின்
கெஞ்சும் விழிகளில் விஞ்சி நின்றது
ஒரே ஒரு வினா!
மிஞ்சி மேவப் பதிலது இருந்தும் - இவன்
பகர மறுத்தான்.
விரும்பாதவன்போல் விறைப்பாய் இருந்தான்.

சின்னவன் நடப்பை
பார்த்த தாயின் இதழ்களில் மென்னகை!

எத்தனை நாடகம் பார்த்தவள் இத்தாய்!
தந்தையை விஞ்சியா... தனயன் இருப்பான்?

பெற்றவள் உணர்ந்தாள் - பெரும்
கனம் கொண்டாள்.
இன்னொரு பக்கம் இன்னலுள் மாண்டாள்.

ஒவ்வாத உறவுகள் பிரிவிலே விலகும்.
ஒருமித்த உறவுகள் பிரிவிலே இறுகும்
புரியாத அன்னையா இவள்?

புத்திரச் செல்வனைப் புரிந்தவள் அணைத்தாள்.
தாய்மையின் அன்பிலே தனயனும் கரைந்தான்.

No comments:

Post a Comment