Sunday, October 25, 2009

அங்கம் 3

பிரியசகி

முகாம்களின் ஓரங்களில் முற்றுகைகள் நீடிக்கும்.
மூன்று நான்கு நாட்களில் ஊருக்கு இது பழகிவிடும்.

பள்ளிகள் திறக்கும் பல்சரக்குக் கடைகளில்
வணிகம் சிறக்கும். சந்தைகள் கூடும்
சந்திகளில் புதிய சங்கதிகள் ஒலிக்கும்.

"கோ" உறையும் "இல்"களில் கொடிகள் உயரும்.
கொட்டுமேளம் கொட்டிக் கொண்டாட்டம் நிறையும்.
உடுக்கடிப்பில் கரகாட்டம் உச்சம் நோக்க,
ஊர்மனைத் திரைகளிலே நிதர்சனம் விழித்திருக்கும்.
வடமறவர் ஆட்சிக்கு வழமையான வாழ்வு இது.
-------------

காளை மாட்டின் கழுத்துமணி கிண்கிணிக்க
கிடுகும், பொச்சும் சுமக்கும் அச்சாணி வண்டிகள்,
நிலம் உழுது களை களைந்து
உற்பத்தி பெருக்கி உழைக்கும் உழவர்குலம்,

கயல் துள்ளும் கடல் நடுவே
கரையாத திடத்தோடு வலை வீசும் கடல்மைந்தர்,
பசு சுரக்கும் பால் கறந்து பக்குவமாய் சுமந்து
படலை தட்டும் பால்க்காரர்,

தேவதைகள் உலவுமுன்றல் கூட்டித்
தண்ணீர் தெளித்து தரணியிலே
கோலமிடும் தமிழ்ப்பாவையர்,
இதற்கு மேல்
அதிகாலை என்பதற்கு ஆதாரம் வேண்டுமா?

போர்க்காலச் சூழல்தான் இருப்பினும்,
ஊருக்கு இது பழகியதால்
இத்தனையும் இயல்பாய் நிகழும்.

இரட்டைப் பின்னலிட்டு
கட்டைக் கறுப்புக் குஞ்சம் கட்டி
பள்ளிச் சீருடையில்
கல்வி கற்கச் செல்வாள் செல்வி
குறுக்கொழுங்கை தாண்டிட
ஓர் எழிற்குமரி சேர்ந்திடுவாள்.

இவள் விருப்புடனே
நட்பியற்றும் பிரியசகியே இப்பூங்குழலி!

இவள் வனப்பு தாமரை அவள் அழகு அல்லி
இவள் விழிகள் கயல்கள் அவள் கண்கள் மான்கள்
உதடுகள் ரோசா இதழ்கள் என்றால்
அடுத்தவளதோ கொவ்வைக் கனிகள்.

இவளோ பிள்ளைத் தமிழ் அவளோ கிள்ளைத் தமிழ்
இருவரும் இரண்டு எழில்கள்
இணைந்தே சுற்றும் பொழில்கள்

இவளின் சித்தம் எதுவோ?
அவளின் வாயில் முத்து!
பள்ளித் தோழிகள் மட்டுமல்ல
மனதைப் பகிரும் நட்பில் இணைகள்.

சிங்களப் படைகள் என்றதும் ஏங்கிச்
சிறகை ஒடுக்கிச் சிறு புள்ளாகும்
தங்களின் வகுப்புத் தோழியர் கண்டு
தாங்கொணாக் கோபம் கொள்ளும் பூக்கள்.

எதிரியை எதிர்க்கத் துணியனும் என்பர்.
எழுச்சியில் பெண்கள் இணையனும் என்பர்.
குறைவிலா பலத்தை அடையனும் என்பர்.
இந்தக்.. .
குவலயம் மெச்சவே நிமிரனும் என்பர்.

பள்ளியில் சுட்டிப் பெண்களாய் இருந்தர்.
தலைமை மாணவக் குழுவிலும் திகழ்ந்தர்.
எள்ளென எடுத்த பொருளினை எல்லாம்
எண்ணெயாய் வடித்து ஏற்றம் பெற்றனர்.

அப்பப்போ தலைமைக் குழுவினர் கூடுவர்
அதனிலே செயற்படு திட்டங்கள் தீட்டுவர்.
இப்போதும் இங்கு இணைந்தனர் அனைவரும்
இதற்குக் காரணம் இனிவரும் சங்கதி!

இன ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்து
ஈழமண் மீட்க இரும்பூத்த இன்றைய போராட்டம்!
இதனை அடக்கி ஒடுக்க இனவெறியர்
மண்ணோடு மக்களையும், வாழ்வியலையும் சிதைப்பர்
அரசியல் சூத்திரம் அறிந்தவர் அறிவர்.

மக்கள் இணைப்பே போராளிக் குழுக்கள்
மனிதத்தைக் காப்பதே தலையாய கடமை
ஊருராய் இந்நிலை எடுத்து இயம்பியே
இன்னுயிர் காக்க விழைந்தனர் புலியணி

முட்டிய வயிறுகள் ஒட்டியே ஒறுத்திட
பட்டினி நிலை வரும்
உடல் பட்டிடும் இரணத்தை ஆற்றிடும்
மருந்திற்கு அதர்மமாய் தடைகள் வரும்.

'உடனடித் தேவையும், உரிய சிகிச்சையும்
ஒருமித்து இல்லாவிடின் இதயங்கள் கதற,
உயிர் வலி மிகுந்து உடல் நிலம் சாய்ந்துவிடும்.'

விடுதலைப் புலிகளின் வீரத் தளபதி
வீரியத்துடன் உரைக்க
கூடிய மாணவமணிகள்
ஓர்கணம் மருண்டு அரண்டிருந்தர்.

உடனடிச் சிகிச்சையே உயிர் காக்கும் ஆயுதம்
அவசர வைத்தியம் அனைவரும் கற்கலாம்.
அண்டை அயலிலே குண்டினால், செல்லினால்
காயம் பட்ட உயிர்களைக் காக்கலாம்.

பள்ளிகள் தோறும் முதலுதவிப் பயிற்சிகள்
பயின்றிடல் வேண்டும் மாணவக் குழுக்கள்
ஊரே......... கொள்ளிடம் ஆகிடும்
நிலையினைத் தவிர்க்க இணையும்
நங்கையர் கரங்களும் நலிவினை வெல்லலாம்.

நற்பணி ஆற்ற வேங்கையர் செப்பினர்.
மறவர் இயம்பிடும் சேதியைக் கேட்டதும்
மங்கையர் தமக்குள் உறுதியும் பூண்டனர்.

எம் மக்களின் இன்னலை மாற்றி எழுதிட
இம்மண்ணின் மீது மறப்போர் வளரும்.

இன்னலைக் களைந்திடும் - இவ்
இலட்சியப் போரிலே
இரத்தம் வீணே இகத்தில் ஓடியே
இங்கெச் சாவும் இனிமேல் இராதென - தமிழ்
ஈழத்தின் மீது சத்தியம் செய்தனர்.

அன்றே தொடங்கிற்று அவசர பயிற்சிகள்
கவனமாகக் கற்றனர் கன்னியரும், காளையரும்
நன்றே அமைந்தது
நாளாக அவ்வூரில் நாலு திக்கிலும்
முதலுதவி வழங்கிட நலன்பேண் நிலையங்கள்.

தொடர்ந்த நாட்களில்
தோழியர் இருவரும் தொண்டர்கள் ஆனார்கள்
ஊழிப் போரிலே ஊர்படும் ரணத்திற்கு
உடனடிச் சிகிச்சைகள் உவந்து வழங்கினர்.
உயிர்களைக் காத்திடும் உன்னத பணியிலே
இச் சாவித்திரிகள் இயமனை செயித்தனர்.

செய்திடும் பணியிலே சோர்ந்ததும் இல்லை
இவர்கள்
சிகப்புத் துளி கண்டு தேம்பியதும் இல்லை.

No comments:

Post a Comment